கே.பி.அன்பழகன் சொத்துக் குவிப்பு வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்
Updated on
1 min read

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மற்றும் மகன்கள் உள்பட 5 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக தொடர்ந்த வழக்கில் விரைவாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தருமபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலகட்டமான 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதன் அடிப்படையில் தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீஸார் கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் கே.பி.அன்பழகன் தேர்தலின் போது கணக்கு காட்டபட்ட சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக, 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்தாரரான கிருஷ்ணமூர்த்தி மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் எனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in