

சென்னை: அக்னி பாதை திட்ட எதிர்ப்பு போராட்டம் காரணமாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடமாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களுக்குள் புகுந்து ரயில்களை தீயிட்டு கொளித்தி வருகின்றனர். இதன் காரணமாக வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரம் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், அக்னி பாதை போராட்டம் காரணமாக பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், மறு உத்தரவு வரும் வரை பிளாட்பாரம் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.