Published : 16 Jun 2022 06:31 AM
Last Updated : 16 Jun 2022 06:31 AM

மாநகராட்சி வாகன நிறுத்தங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் மக்கள் புகார் அளிக்கலாம்: ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி வாகன நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வாகனங்கள் நிறுத்துவதற்காக 83 இடங்களில் சுமார் 7 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடங்கள் கண்டறியப்பட்டு, மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வாகன நிறுத்த இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 , இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தும் இடங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி, அதற்கான கட்டணத்தை செலுத்தினால் கட்டணம் வசூலிப்பாளரின் மூலம் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதை பயன்படுத்தி பொதுமக்கள் ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வாகன நிறுத்த செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு வாகன நிறுத்த இடத்திலும், 25மீ. இடைவெளியில் அறிவிப்புபலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தும்இடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், இந்தப் பலகைகளில் குறிப்பிட்டுள்ள தொலைபேசிஎண்களை தொடர்பு கொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும் 1913 என்ற மாநகராட்சியின் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x