காரைக்குடி நகராட்சி பள்ளியில் இடம் கிடைக்காமல் மாணவர்கள் ஏமாற்றம்: தொடர்ந்து கட்டிட வசதியை காரணம் காட்டும் நிர்வாகம்

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக தங்களது குழந்தைகளுடன் குவிந்துள்ள பெற்றோர்.
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக தங்களது குழந்தைகளுடன் குவிந்துள்ள பெற்றோர்.
Updated on
1 min read

காரைக்குடி: காரைக்குடி நகராட்சிப் பள்ளியில் இடம் கிடைக்காததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி 2013-ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 6 ஆசிரியர்கள், 218 மாணவர்கள் இருந்தனர். தனியார் பள்ளிகளைப் போன்று சீருடை, டை, ஷூ அணியும் முறை இங்கு கொண்டு வரப்பட்டதால் பெற்றோ ரிடம் வரவேற்பை பெற்றது.

மேலும் 2014-15-ம் கல்வியாண்டில் ஆங்கில வழிக் கல்வியும் தொடங்கப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டதில் இருந்தே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது.

மாணவர்கள் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்தது. தற்போது 55 ஆசிரியர்களுடன் 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ஜூன் 13-ல் பள்ளி திறக்கப்பட்ட நிலையில், இந்த கல்வியாண்டிற்கு 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மொத்தம் 300 இருக்கைகள் உள்ள நிலையில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6-ம் வகுப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக இருக்கும் இடங்களைவிட கூடுதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், கட்டிட வசதியை அதிகரிக்காமல் தொடர்ந்து கட்டிட வசதி இல்லை என்ற காரணத்தையே பள்ளி நிர்வாகம் கூறி வருகிறது.

மேலும் 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியை திருவேலங்குடி அரசு உயர் நிலை பள்ளித் தலைமை ஆசிரியரே கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

இதனால் நிரந்தர தலைமை ஆசிரியரை நியமித்து, கூடுதல் மாணவர்கை சேர்க்க பள்ளிக் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், ‘பள்ளி கட்டிட வசதிக்கு ஏற்பத்தான் மாணவர்களைச் சேர்க்க முடியும். இந்தாண்டு முடிந்தவரை கூடுதலான மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தி உள்ளேன். மேலும் கூடுதல் பள்ளிக் கட்டிடம் கட்ட இடம் பார்க்க அறிவுறுத்தி உள்ளேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in