சென்னை | காவலர் குடியிருப்பில் 2 வீடுகளில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை

சென்னை | காவலர் குடியிருப்பில் 2 வீடுகளில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை
Updated on
1 min read

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பழமையான காவலர் குடியிருப்பில் உள்ள 2 வீடுகளில் அடுத்தடுத்து மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பழமையான காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 400 வீடுகள் உள்ளன. இங்கு குடியிருக்கும் காவலர்கள் ரியாஸ்கான், கண்ணன் ஆகியோரது வீட்டின் மேற்கூரை நேற்று காலை திடீரென பெயர்ந்து விழுந்தது.

வீட்டில் உள்ள பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றதாலும், காவலர்கள் பணிக்கு சென்றதாலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என குடியிருப்பில் வசிப்போர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், மேற்கூரை பெயர்ந்து விழுந்ததை அறிந்த காவலர் குடியிருப்பினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி ஒரே இடத்தில் கூடினர். இதையறிந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து பெயர்ந்து விழுந்த மேற்கூரையை விரைந்து சீரமைத்து கொடுக்க உத்தரவிட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் வசிப்பவர்கள் உட்பட மேலும் பல காவலர் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக ஆயிரம் விளக்கு பகுதியில் புதிதாக காவலர்குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டுள்ளது.

அதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்க தனித்தனி வீடுகள் உள்ளன. கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அந்த குடியிருப்பு பயனாளர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, புதிய காவலர் குடியிருப்பை பயனாளர்களுக்கு விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in