

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்பு வனத்தில் மேலூர் பகுதியில் உள்ள முனி கோயிலுக்கு 21 அடி நீள அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் அதிகளவில் அரிவாள் தயாரிக்கப்படுகிறது. போலீஸார் கெடுபிடியால் வீச்சரிவாள் தயாரிப்பதை நிறுத்திவிட்டனர். தற்போது விறகு வெட்டுவதற்கான ஒரு அடி நீள அரிவாளை மட்டும் தயாரிக்கின்றனர். அதுவும் ஆதார் கார்டு கொடுத்தால் மட்டுமே தயாரித்து கொடுக்கின்றனர்.
மேலும் ஆடி, புரட்டாசி மாதங்களில் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அரிவாள்களும் தயாரிக்கப்படுகின்றன. திருப்புவனம் மேல ரத வீதியில் உள்ள அரிவாள் பட்டறைகளில் நேர்த்திக்கடன் அரிவாள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சதீஷ் என்பவரது பட்டறையில் மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வரிச்சியூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கொடுத்த ஆர்டரின்பேரில், 15 அடி நீள அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 140 கிலோ எடை கொண்ட இந்த அரிவாளை 10 பேர் சேர்ந்து 10 நாட்கள் தொடர்ந்து தயாரித்துள்ளனர்.
அரிவாள் மூக்கு அகலம் 2.5 அடி, நடுப்பகுதி 1.25 அடி அகலம், அடிப்பாகம் முக்கால் அடி அகலம் உள்ளது. இதனை தயாரிக்க அடிக்கு ரூ.2,000 வீதம் ரூ.30,000 வாங்கி உள்ளனர்.
அதேபோல் கார்த்திக் என்பவரது பட்டறையில் மேலூர் பகுதியில் உள்ள முனிக்கோயிலுக்கு நேர்த்திக் கடனுக்காக பொன்னமராவதியைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் ஆர்டரின் பேரில் 21 அடி நீள அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 300 கிலோ எடை கொண்ட இந்த அரிவாளை 4 பேர் சேர்ந்து ஒரு மாதத்தில் தயாரித்துள்ளனர்.
அரிவாள் மூக்கு 3.5 நீளம், நடுப்பகுதி 2 அடி அகலம், அடிப்பாகம் ஒரு அடி அகலம் உள்ளது. இதனை தயாரிக்க அடிக்கு ரூ.2,000 வீதம் ரூ.42,000 வாங்கியுள்ளனர்.