

சென்னை: சென்னை பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருந்து வரும் 1,436 பேருக்கு, ரூ.38 கோடியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்று வீடுகள் வழங்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2015, 2017-ம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, சேகர் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “பெத்தேல் நகரில் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
குடியிருப்புவாசிகளுக்கு மாற்று வீடுகள் வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மொத்தமுள்ள 1,436 ஆக்கிரமிப்பாளர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.38 கோடியில் மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ. 29 கோடி நிதியையும் ஒதுக்க அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் 926 பேருக்கான வீடுகள் தயாராக உள்ளன. எஞ்சிய 510 பேருக்கும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் வீடுகள் ஒதுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “இது தொடர்பான அறிக்கையை மனுதாரர் தரப்புக்கு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 926 பேருக்கான வீடுகள் தயாராக உள்ளன. எஞ்சிய 510 பேருக்கும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் வீடுகள் ஒதுக்கப்படும்