அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்களே; எந்த சமூகத்தைப் பற்றியும் தவறாக பேச அனுமதிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்களே; எந்த சமூகத்தைப் பற்றியும் தவறாக பேச அனுமதிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து
Updated on
1 min read

சென்னை: அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்களே என்றும், எந்தவொரு சமூகத்தைப் பற்றியும் தவறாக பேச ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீராமிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்தாண்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சாம் அபிஷேக் தொடர்ந்த வழக்கு நேற்று நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பட்டியலினத்தவர்கள் குறித்து தான் தவறாகப் பேசவில்லை என்றும், நடிகை மீரா மிதுன் பேசும்போது அருகில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பில், நடிகை மீரா மிதுன் பேசுவதற்கும், அந்த பேச்சை சமூக வலைதளங்களில் பரப்பவும் மனுதாரர் ஆதரவாக செயல்பட்டுள்ளார், என குற்றம் சாட்டப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, நம் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்களே. எந்தவொரு சமூகத்தைப் பற்றியும் தவறாகப் பேச ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, என தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மீராமிதுன் மற்றும் சாம் அபிஷேக் மீதான வழக்கு விசாரணை நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஜூன் 22-ம் தேதி இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவுக்காக இருவரும் நேரி்ல் ஆஜராக வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in