நாமக்கல்லைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் சின்னப்ப பாரதி மறைவு

நாமக்கல்லைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் சின்னப்ப பாரதி மறைவு
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரான கு. சின்னப்ப பாரதி (88) உடல் நலக்குறைவால் இன்று மாலை உயிரிழந்தார்.

நாமக்கல் - மோகனூர் சாலை முல்லை நகரைச் சேர்ந்தவர் முற்போக்கு எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி (88). இடதுசாரி சிந்தனைகளை கொண்ட எழுத்தளார் சின்னப்ப பாரதி இதுவரை தாகம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா ஆகிய 7 நாவல்களை எழுதியுள்ளார். இவரது நாவல்கள் ஆங்கிலம், பிரெஞ்ச், டேனிஷ், சிங்களம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி என இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது எழுத்துப் பணியை பொன்னீலன் போன்ற முன்னணி எழுத்தாளர்கள் பாராட்டி கட்டுரை எழுதியிருப்பது மட்டுமின்றி, பல்வேறு இலக்கிய அமைப்புகளும் விருது வழங்கிக் கவுரவித்துள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மூலம் வழங்கப்பட்ட பொற்கிழி விருது உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன. அதேசமயம், இவரும் பல எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பாராட்டு விழா நடத்தி, விருது, பணமுடிப்பு வழங்கி வந்தார்.

இதனிடையே, கடந்த சில வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சின்னப்பபாரதி இன்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் நாளை நாமக்கல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in