

ராமேசுவரம்: சென்னை - ராமேசுவரம் - கன்னியாகுமரி இடையே சுற்றுலா கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் 7,500 கி.மீ. நீளமுள்ள கடற்கரை மற்றும் சுமார் 25,000 கி.மீ. நீளத்தில் நீர்வழிப்பாதைகளைக் கொண்ட இந்தியாவில் சாகர்மாலா என்ற சிறப்புத் திட்டம் மூலம் உள்நாட்டு நீர்வழி சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தும் பணி சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுத்த மத்திய அரசு பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.
இதில் நீண்ட 1,100 கி.மீ. நீளம் கடற்கரையைக் கொண்ட தமிழகத்தில் கப்பல் தளங்கள், துறைமுக இணைப்புச் சாலைகள், பயணிகள் முனையம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடலூர், சின்னமுட்டம், கன்னியாகுமரி உள்ளிட்ட சிறு துறைமுகங்கள் இத்திட்டத்தில் நவீனப்படுத்தப்பட உள்ளன. கன்னியாகுமரி - ராமேசுவரம் இடையே பயணிகள் மற்றும் சுற்றுலா கப்பல் போக்குவரத்து தொடங்கவும் ஆய்வறிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதியன்று 'கோர்டிலியா குரூஸ்' என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டத்தை சென்னை துறைமுகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தக் கப்பலில் கேசினோ சூதாட்டங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னையிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் சென்று விட்டு புதுச்சேரிக்கு இக்கப்பல் வந்தது. ஆனால், புதுச்சேரி அரசு அனுமதி இல்லை என்பதால் மீண்டும் சென்னை திரும்பியது.
இதுகுறித்து ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விடுத்திருக்கும் கோரிக்கையில், ''சொகுசு கப்பல் பயணத்தை புதுச்சேரி அரசு அனுமதிக்காத நிலையில் தமிழகத்திற்கு உட்பட்ட தென் மாவட்ட சுற்றுலாத் தலங்களான ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தொடங்க வேண்டும்.
தென்மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு சொகுசு சுற்றுலா கப்பல் பயணத்தை துவங்குவதன் மூலம் என்னுடைய தொகுதிக்குட்பட்ட தென் மாவட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை மேம்படுவதற்கு பயனுள்ளதாய் அமையும்.
எனவே, இதுகுறித்து பரிசீலித்து ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்னையில் இருந்து சொகுசு கப்பல் இயக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று நவாஸ்கனி எம்.பி. கூறியுள்ளார்.