‘வழக்கத்தைவிட சற்று கடினம்’ - 68 மையங்களில் நடந்த சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு

‘வழக்கத்தைவிட சற்று கடினம்’ - 68 மையங்களில் நடந்த சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு
Updated on
1 min read

சென்னை: சிவில் சர்வீஸ் பணிக்கான முதல் நிலைத் தேர்வு தமிழகத்தில் 68 மையங்களில் நேற்று நடைபெற்றது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் குடிமைப்பணி தேர்வுகளை (சிவில் சர்வீஸ்) நடத்தி வருகிறது.

இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

நடப்பாண்டு 1,011 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. முதல்நிலைத் தேர்வெழுத நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 30,000 பேர் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், முதல்நிலைத் தேர்வு நேற்று நாடு முழுவதும் 77 நகரங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் 68 மையங்களிலும், புதுச்சேரியில் 9 மையங்களிலும் தேர்வு நடைபெற்றது. நேற்று காலைமுதல்தாள் தேர்வும் (பொது அறிவு), மதியம் 2-ம் தாள் (திறனறிவு) தேர்வும் நடத்தப்பட்டது.

தேர்வு மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பலத்த பரிசோதனைக்குப் பின்னரே தேர்வறைக்குள்பட்டதாரிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

தேர்வு வினாத்தாள் வழக்கத்தைவிட சற்று கடினமாக இருந்ததாகவும், கேள்விகளுக்குப் பதில் அளிக்க போதிய நேரமில்லை என்றும் தேர்வர்கள் தெரிவித்தனர். முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in