

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப்பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது. இதன்படி இந்தாண்டிற்கான முதல் நிலைத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இன்று காலை, மதியம் என இரு வேளைகளில் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 77 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது.
காலை 09:30 - 11:30 மற்றும் மதியம் 02:30 - 04:30 என்று இரு வேளைகளில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் 68 மையங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு எழுதும் மாணவர்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே ஓஎம்ஆர் தாளில் பயன்படுத்தவேண்டும். சாதாரண கைக்கடிகாரங்களைப் பயன்படுத்தலாம். மொபைல் போன்கள், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச், புளூ டூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்; தங்களுக்கான கிருமிநாசினி திரவத்தை தெளிவான பாட்டில்களில் கொண்டு வரவேண்டும்' என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.