

சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு அலுவலகமான பி.ராமமூர்த்தி நினைவகத்தில், தேசியக் கொடியை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஏற்றினார். (அடுத்த படம்) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கிய கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சி அலுவலகங்களில் 80-வது சுதந்திர தினம் விழா நேற்று கோலாகல மாகக் கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் 80-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில், தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு அலுவலகமான பி.ராமமூர்த்தி நினைவகத்தில், தேசியக் கொடியை ஏற்றிவைத்து, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.
செங்கொடியை மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஏற்றி வைத்தார். மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தி.நகர், செவாலியர் சிவாஜிகணேசன் சாலையில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா, தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமைநிலையச் செயலாளர் பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணைச் செயலாளர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல், மக்கள் நீதி மய்யம், பெருந்தலைவர் மக்கள் கட்சிதலைமை அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
தலைவர்கள் வாழ்த்து: சுதந்திர தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா. நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம், சகோதரத்துவம், முற்போக்கு, மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், இனங்களைக் கொண்ட மக்களின் ஒற்றுமையே நமது இந்தியாவின் பெருமை. இந்த பன்மைத்துவத்தை என்றும் பாதுகாப்போம்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பல்வேறு வீரர்களின் தீரத்தாலும் தியாகத்தாலும் நமக்கு கிடைத்த வளமிகு இந்தியத் திருநாட்டை ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் சமூகநீதிப் பாதையில் வலிமையான நாடாக தொடர்ந்து கட்டமைத்திட இந்த சுதந்திர நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.