

சென்னை: கடந்த மே மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயிலில் 47.87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பொதுப் போக்குவரத்தில் மெட்ரோ ரயில் முக்கியப் பங்காற்றி வருகிறது. கார், ஆட்டோ கட்டணத்தை ஒப்பிடுகையில், குறைந்த கட்டணத்தில், விரைவாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல மெட்ரோ ரயில் பெரிதும் உதவுகிறது.
இதனால், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் 47.87 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இது அதற்கு முந்தைய மாதத்தைவிட 2.41 லட்சம் கூடுதலாகும்.
குறிப்பாக, மே 26-ம் தேதியன்று அதிகபட்சமாக 1.91 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை மொத்தம் 1.95 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் சுட்டெரிக்கும் கோடை வெயில் நிலவியதால், ரயில் மற்றும் பேருந்துகளைத் தவிர்த்து, மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.