

சென்னை: தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக, கடந்த 24-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. நாளை (ஜூன் 1) தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 3-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 இடம் கிடைத்துள்ளது. அதில் 3 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் 2 பேர் போட்டியிடுகின்றனர்.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனுக்களை நேற்றுடன் தாக்கல் செய்து முடித்துவிட்டனர்.
இதுதவிர, சுயேச்சைகளாக பத்மராஜன், அக்னி ராமச்சந்திரன், மன்மதன், த.நா.வேல்முருகன் சோழகனார், தேவராஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாகும்.
ஒரு வேட்பாளருக்கு 34 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுவேண்டும். அத்துடன், வேட்புமனு தாக்கலின்போது 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிவுக் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.
நாளை (ஜூன் 1) நடைபெறும் வேட்பு மனு பரிசீலனையின்போது, முன்மொழிவுக் கடிதம் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.
அந்த வகையில், திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.கல்யாணசுந்தரம், ஆர்.கிரிராஜன், ராஜேஷ்குமார், அதிமுக சார்பில் போட்டியிடும் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் ஆகியோர் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது. வேறு தகுதியான வேட்புமனுக்கள் வராதபட்சத்தில், தேர்தல் நடைபெறாது. எனவே, இறுதி அறிவிப்பு வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.