தமிழகத்தில் மதம், சாதி கலவரம், சாராய உயிரிழப்பு இல்லை: டிஜிபி சைலேந்திரபாபு திட்டவட்டம்

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்கள் குற்றவாளிகளை கைது செய்யும் போது, இருவருக்கும் தீங்கு விளைவிக்காத ஆயுதங்களின் பயன்பாட்டை பார்வையிட்டார்.
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்கள் குற்றவாளிகளை கைது செய்யும் போது, இருவருக்கும் தீங்கு விளைவிக்காத ஆயுதங்களின் பயன்பாட்டை பார்வையிட்டார்.
Updated on
1 min read

திருவள்ளூர்: தமிழகத்தில் மதக் கலவரம், சாதி கலவரம், சாராய உயிரிழப்பு கிடையாது. ஆகவே, தமிழகம் அமைதியாக உள்ளது என, டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சென்று, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட இடங்களில் திருடப்பட்டு மீட்கப்பட்ட ரூ.172 லட்சம் மதிப்புள்ள 218 பவுன் நகைகள், 100 செல்போன்கள், ரூ.74 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் இதரப் பணியாளர்களை பாராட்டி ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

பிறகு அவர், காவலர்கள் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது, குற்றவாளிகள் காவலர்களை தாக்கும் சூழல் ஏற்பட்டால், இருவருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் பயன்படுத்தும் ஆயுதங்களான மிளகுத்தூள் ஏவுதல், துப்பாக்கி, ரப்பர் பந்து லாஞ்சர், ஷாக் பேட்டன், ஷாக் ஷீல்ட்ஸ், உலோக கைவிலங்குகள், விரிவுபடுத்தக்கூடிய தடி மற்றும் உடலில் அணியும் கேமரா ஆகியவற்றின் செயல் முறை விளக்கம் மற்றும் பயன்பாட்டை பார்வையிட்டார்.

பின்னர், குற்றம் செய்யும் நபர்களைக் கைது செய்யும்போது தீங்கு விளைவிக்காத வகையில் ஜூடோ, அய்கிடோ மற்றும் ஜுஜுட்சு போன்றவை அடங்கிய தற்காப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆவடி காவல் ஆணையரகத்தின் பெண் காவலர்களை உள்ளடக்கிய சிறப்பு நடவடிக்கை குழுவினர், செயல்முறை விளக்கம் செய்து காட்டியதை பார்வையிட்டார்.

பிறகு, செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது: லாக்கப் மரணங்களை தடுக்கும் வகையில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆபரேஷன் கஞ்சாவேட்டை 2.0 மூலம் கஞ்சா விற்பனை தொடர்பாக 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும். அதேபோல், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

தமிழகத்தில் மதக்கலவரம், சாதி கலவரம், சாராய உயிரிழப்பு கிடையாது. ஆகவே, தமிழகம் அமைதியாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் கள்ளச்சாராய விற்பனை இல்லை. மலைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஒரு சிலர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுகின்றனர். அதையும் ரெய்டு நடத்தி தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டிஜிபியின் ஆய்வின்போது, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் காவல் ஆணையர் விஜயகுமாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in