Published : 13 May 2016 08:57 AM
Last Updated : 13 May 2016 08:57 AM

பண நடமாட்டத்தை தடுக்க 3 நாட்களுக்கு மின்வெட்டு கூடாது: மத்திய அமைச்சர் யோசனை

‘தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்களில் கடைசி நேர பண நடமாட்டத்தை தடுக்க கடைசி 3 நாட்கள் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்' என்று மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் யோசனை தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் நேற்று நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்துக்கு அதிகாரத்துடன் கூடிய தனி மாநில அந்தஸ்தை ரங்கசாமி கோரி வருகிறார். ஆனால் அவரது ஆட்சியில் மக்களுக்கு அதிகாரம் இல்லை. புதுச்சேரியை விட்டு ஏராளமான தொழிற்சாலைகள் வெளியேறி விட்டன. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. ரங்கசாமி ஆட்சியில் புதுச்சேரி பேரழிவை சந்தித்து விட்டது. முதல்வர் ரங்கசாமி நம்பிக்கைக்குரியவர் இல்லை. சந்தர்ப்பவாத அரசியல் புரிந்து வருகிறார்.

புதுச்சேரி அரசுக்கு மின் உற்பத்திக்காக பிப்டிக் அரசு நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதை முறைகேடான வழியில் தனியார் நிறுவனத்துக்கு புதுவை அரசு தாரை வார்த்தது. மக்களுக்கு குறைந்த செலவில் மின்சாரத்தை தயாரித்து வழங்காமல், சிலர் இதன் மூலம் பயன் அடைந்துள்ளனர். இதனால்தான் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் புதிய நேர்மையான அரசு ஏற்பட்டவுடன் கோரினால் நிலக்கரி சுரங்கம் அரசுக்கு ஒதுக்கப்படும்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் ஓரே நோக்கம் ஊழல் முறைகேடுதான். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் கடைசி கட்ட பண நடமாட்டத்தை தடுக்க கடைசி 3 நாட்கள் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x