கன்டெய்னரில் ரூ.570 கோடி: சிபிஐ விசாரணை நடத்த ரங்கராஜன் எம்.பி. கோரிக்கை
கண்டெய்னரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.570 கோடி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் வலியுறுத் தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையின் போது கோவையிலிருந்து ரூ.570 கோடியை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் பிடிக்கப்பட்டது. அது வங்கியிலிருந்து விசாகப்பட்டினத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறியுள்ளனர். ஆந்திர வங்கிக்கு ரூ.570 கோடி செல்கிறது என்றால் அதில் நிச்சயம் ரிசர்வ் வங்கியின் தலையீடு இருந்திருக்கும். சென்னை, ஐதராபாத் என ரிசர்வ் வங்கி கிளைகள் உள்ள நிலையில், கோவையிலிருந்து பணம் அனுப்பியது ஏனென்று புரியவில்லை.
அப்படியே அனுப்பினாலும், இவ்வளவு பெரிய பெருந்தொகையை எடுத்துச் செல்கிறபோது அவற்றுக்கு போதிய பணப்பரிமாற்ற காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த சம்பவத்தில் எடுத்து செல்லப்பட்ட பணத்துக்கு காப்பீடு செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை. அந்த வாகனத்தில் வந்தவர்கள் ஓடியதும் சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் இடம்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
