அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்க தடை கோரி மனு: திருப்பூர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்க தடை கோரி மனு: திருப்பூர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அமராவதி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தனி நபரால் தண்ணீர் எடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "திருப்பூர் மாவட்டம் மன்னக்கடவு கிராமத்தில் ஓடும் அமராவதி ஆற்றில் இருந்து பழனிசாமி என்பவர் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதோடு அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ளார். சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதால் இந்த பகுதியின் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு விவசாய பணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். மேலும் நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால்நடைகள் மேய்ச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதையும், ஆக்கிரமிப்பை தடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து திரூப்பூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in