Published : 17 May 2022 11:06 AM
Last Updated : 17 May 2022 11:06 AM

பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தி  2-வது நாளாக வேலைநிறுத்தம்

திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 வது நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது .

கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிமிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாதம் கிலோ 40 ரூபாய் வரை விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.403-க்கும், 24-ம் நம்பர் ரூ.415-க்கும், 30-ம் நம்பர் ரூ.425-க்கும், 34-ம் நம்பர் ரூ.445-க்கும், 40-ம் நம்பர் ரூ.465-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.395-க்கும், 24-ம் நம்பர் 405-க்கும், 30-ம் நம்பர் ரூ.415-க்கும், 34-ம் நம்பர் 435-க்கும், 40-ம் நம்பர் ரூ.455-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதன் காரணமாக இனி வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் இருப்பதால் உடனடியாக மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்து செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும், நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும், பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16 மற்றும் 17 தினங்களில் திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்று கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பின்னலாடை தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தது. திருப்பூரில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதன் காரணமாக நாளொன்றுக்கு 360 கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று துவங்கிய வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டு போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x