இறுதிச் சடங்குக்கு பணம் இல்லாததால் தாய் உடலை டிரம்மில் வைத்து சிமென்ட் பூசி அடக்கம்: மகன் வாக்குமூலத்தால் சென்னையில் அதிர்ச்சி

சென்னை நீலாங்கரையில் சிமென்ட் பூசி மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட டிரம்.
சென்னை நீலாங்கரையில் சிமென்ட் பூசி மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட டிரம்.
Updated on
1 min read

சென்னை: இறுதிச் சடங்குகள் செய்ய பணம் இல்லாததால், தாய் உடலை தண்ணீர் டிரம்மில் போட்டு சிமென்ட் பூசி அடக்கம் செய்ததாக மகன் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரை சேர்ந்த மூதாட்டி செண்பகம் (86). இவருக்கு பாபு (62), சுரேஷ் (53) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பாபு திருமணமாகி, குடும்பத்துடன் சோழிங்கநல்லூரில் வசிக்கிறார். இளைய மகன் சுரேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால், அவரது மனைவி தனது 2 பிள்ளைகளுடன் கடந்த ஏப்.8-ம் தேதி பெருங்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதனால், வீட்டில்சுரேஷும், அவரது தாய் செண்பகமும் மட்டும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், தாயைபார்க்க மூத்த மகன் பாபுநேற்று காலை 7 மணி அளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அவரை வீட்டுக்குள் விடாமல் சுரேஷ் தடுத்துள்ளார். தாயைப் பற்றி பாபுகேட்டபோதும், சுரேஷ் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.

மூதாட்டியின் மகன் சுரேஷ்.
மூதாட்டியின் மகன் சுரேஷ்.

இதனால் சந்தேகம் அடைந்த பாபு, இதுகுறித்து நீலாங்கரை போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் அங்கு வந்து சுரேஷிடம் விசாரணை நடத்தினர்.

‘‘தாய் செண்பகம் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாததால், வீட்டில் இருந்த தண்ணீர் டிரம்மில் அவரது உடலை வைத்து,ஒரு மூட்டை சிமென்ட் வாங்கி,உடலை டிரம்மிலேயே வைத்து பூசி அடக்கம் செய்துவிட்டேன்’’ என்றார்.

இதை கேட்டு அதிர்ந்த போலீஸார், டிரம்மில் இருந்து உடலை எடுக்க முயன்றனர். எடுக்க முடியாததால், பிரேதப் பரிசோதனைக்காக டிரம்முடன் ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது இயற்கை மரணமா, கொலையா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in