Published : 15 May 2022 04:00 AM
Last Updated : 15 May 2022 04:00 AM

மதுராந்தகம் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் கொலை: போதையில் இருந்த இளைஞர் கைது; ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவு

மதுராந்தகம்

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று விழுப்புரம் நோக்கி வந்தது.அந்தப் பேருந்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெருமாள்(54) நடத்துநராக பணிபுரிந்து வந்தார்.இந்த பேருந்து மதுராந்தகம் புறவழிச் சாலையில் பயணிகளை இறக்கிவிட நின்றது. பயணிகள் இறங்கும்போது அங்கு போதையில் நின்றிருந்த சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன் (34) என்பவர் இந்தப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறிய முருகன் ஆரம்பம் முதலே பயணச் சீட்டு வாங்காமல் இருந்துள்ளார். நடத்துநர் பெருமாள் திரும்ப திரும்ப பயணச் சீட்டு குறித்து கேட்டபோது சூனாம்பேடு செல்வதற்கு பயணச் சீட்டு வேண்டும் என்று முருகன் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து நடத்துநர் பெருமாள், “இந்தப் பேருந்து விழுப்புரம் நோக்கிச் செல்கிறது. சூனாம்பேடு செல்லாது. அதனால் மேல்மருவத்தூர் வந்ததும் இறங்கிவிட்டு அங்கிருந்து வேறு பேருந்து மூலம் சூனாம்பேடு செல்லவும். மேல்மருவத்தூர் வரை பயணச் சீட்டு எடுக்கவும்” என்று கேட்டுள்ளார்.

ஆனால் போதையில் இருந்தமுருகன் தன்னை சூணாம்பேட்டில் இறக்கி விட்டே ஆக வேண்டும் என்று தகராறு செய்ததுடன், மேல்மருவத்தூர் வரை பயணச் சீட்டு வாங்கவும் மறுத்துள்ளார். இதனால் நடத்துநர் பெருமாளுக்கும், முருகனுக்கும் தகராறு ஏற்பட்டது. பயணிகள் சிலர் கூறிய அறிவுரையையும் முருகன் ஏற்காமல் பெருமாளைத் தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த பெருமாள் மயக்கமானார்.

பின்னர் பேருந்து மேல்மருவத்தூர் பகுதியில் நிறுத்தப்பட்டு பெருமாளை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெருமாள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் மதுராந்தகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றுவிட்ட முருகனை போலீஸார் தேடிப் பிடித்து கைது செய்தனர். இது குறித்து பேருந்தில் பயணித்த பொதுமக்கள் கூறும் போது, “போதையில் இருந்த முருகன், தொடக்கத்தில் இருந்தே, நடத்துநரிடம் வாக்குவாதம் செய்து வந்தார். திடீரென்று நடத்துநரைத் தாக்கினார். மேலும் அந்தத் தாக்குதலில் நடத்துநர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் பெருமாள் பிள்ளை குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்தில் பயணித்த பயணியால் தாக்கப்பட்ட நடத்துநர் உயிரிழந்தசெய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் பெருமாள் பிள்ளையின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x