திட்டுவிளை குளத்தில் சிறுவன் மர்ம மரணம்: ஏடிஎஸ்பி விசாரணை

திட்டுவிளை குளத்தில் சிறுவன் மர்ம மரணம்: ஏடிஎஸ்பி விசாரணை
Updated on
1 min read

கேரள மாநிலம் விழிஞ்ஞத்தை சேர்ந்தவர் நிஜிபு. இவரது இரண்டாவது மகன் ஆதில் முகமது (12). அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

ஆதில் முகமதுவின் தாயார் சுஜிதாவின் சொந்த ஊர் குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை ஆகும். பாட்டி வீட்டுக்கு தாயாருடன் ஆதில் முகமது வந்திருந்தார். கடந்த 6-ம் தேதி விளையாடச் சென்ற ஆதில் முகமது வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பூதப்பாண்டி போலீஸார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி திட்டுவிளை மணத்திட்டையில் உள்ள குளத்தில் மூழ்கிய நிலையில்கிடந்த ஆதில் முகமது சடலம் மீட்கப்பட்டது. மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஜிதா பூதப்பாண்டி போலீஸாரிடம் புகார் கூறினார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சிறுவன் ஆதில் முகமதுவின் மரணத்தின் உண்மை நிலையை அறிய விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்றுஅவரது உறவினர்கள் கோரிக்கைவிடுத்தனர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விவரங்களை எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் கேட்டறிந்து, விசாரணையை ஏ.டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையிலான தனிப்படை விசாரிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து ஏடிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆதில் முகமது குளத்தில் ஆடையின்றி சடலமாக கிடந்தது குறித்து உடன் சென்ற சிறுவர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in