Published : 16 Jun 2014 06:22 PM
Last Updated : 16 Jun 2014 06:22 PM

கடந்த 60 ஆண்டுகளில் 1000 ஆலயங்களுக்கு குடமுழுக்கு : ஆன்மிகத்தோடு தமிழ் வளர்க்கும் ஜமீன் நாராயணன் செட்டியார்

ஒரு கோயிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வதே பெரிய காரியம். ஆனால், கடந்த 60 ஆண்டுகளில் ஆயிரம் கோயில்களுக்குமேல் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தி வைத்து சாதனை படைத்திருக்கிறார் ஜமீன் சோம.நாராயணன் செட்டியார். ஆன்மிகத்தோடு தமிழை வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையைச் சேர்ந்த ஜமீன் தார் குடும்பத்து வாரிசு சோம.நாராயணன் செட்டியார். சைவத்துக் கும் தமிழுக்கும் தொண்டு செய் வதில் இவரது முன்னோர்களுக்கு அவ்வளவு ஆர்வம். 1900-ல் ராமேஸ் வரம் கோயில் கிழக்கு கோபுரத் தையும் கிழக்கு பிரகாரத்தையும் பெரும் பொருட்செலவில் கட்டி முடித்தவர் இவரது ஐயா வெள்ளையன் செட்டியார்.

இதேபோல், காளையார்கோவில் கோயிலின் திருப்பணியிலும் பெரும்பங்கு வெள்ளையன் செட்டியாருடையதுதான். இதனால், இந்த 2 கோயில்களிலும் ஜமீன் தார் குடும்பத்தினர் பரம்பரை அறங்காவலர்களாக அங்கீகரிக் கப்பட்டுள்ளனர். தேவகோட்டை அருகே காசநோய் மருத்துவமனை கட்ட அரசாங்கத்தில் நிலம் கேட் டபோது தங்களுக்குச் சொந்தமான 400 ஏக்கரை இனாமாக எழுதித் தந்தவர் நாராயணன் செட்டியாரின் தந்தை சோமநாதன் செட்டியார்.

முன்னோர்கள் ஆன்மிகத் திருப் பணியில் தீவிரமாக இருந்ததால் நாராயணன் செட்டியாரும் 16 வயதிலேயே சிவ தொண்டரானார். வினோபா பாவே, முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டோருடன் நெருக்க மான தொடர்பில் இருந்தவர். தேவகோட்டை பகுதியில் மூன்று நாட்கள் இவரது தோள் பிடித்து நடந்து, பூமி தான இயக்கத்துக்கு நிலம் திரட்டினார் வினோபா பாவே. கோடீஸ்வரராக இருந்தாலும் இன்றைக்கும் கசங்கிப்போன கதர் ஆடைதான் இவரது இயல்பான உடை.

காசி முதல் ராமேஸ்வரம் உள்ள முக்கியமான சாதுக்கள் அனைவருக்கும் இவர் நன்கு பரிச் சயம். பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே தேவாரம், திருவாச கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து 64 ஆண்டுகளாக வெள்ளிக்கிழமை தோறும் வார வழிபாட்டை நடத்தி வருகிறார். தேவாரத்தில் உள்ள அத்தனை பாடல்களும் இவருக்கு அத்துபடி. இதைப் பாராட்டி ஊரன் அடிகள் இவருக்கு ‘நடமாடும் மாணிக்கவாசகர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

நாராயணன் செட்டியாரின் வாரவழிபாட்டு மன்றத்தில் சைவம் படித்தவர்களில் நீதியரசர்கள் ஏ.ஆர்.லட்சுமணன், கற்பகவிநாயகம் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர் உருவாக்கிய ’பிரவசன சபா’, 40 ஆண்டுகளாக தேவகோட்டை பகுதியில் ஆண்டுக்கு பத்து நாள் சொற்பொழிவுகளை நடத்தி தமிழ் வளர்த்துக் கொண்டிருக்கிறது. சமுதாய தொண்டில் பள்ளிக் குழந்தைகளும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி நாளில் பள்ளி மாணவர்களை வைத்து உழவாரப் பணிகளை செய்து வருகிறார் நாராயணன் செட்டியார்.

இப்போது 84 வயதை தொட்டி ருக்கும் இவர், கடந்த 60 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில் களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார். பெரும்பாலான இடங்களில் கோயில் திருப்பணிக்கான பணி களை தொடங்குவார்கள். பல்வேறு காரணங்களால் அந்தப் பணி பாதியில் நிற்கும். அதுபோன்ற நேரங்களில் வலியப்போய் தோள் கொடுக்கும் நாராயணன் செட்டியார், தனக்குத் தெரிந்த அன்பர்கள், நண்பர்களிடம் நிதி திரட்டி, தானும் ஒரு பங்கு நிதி கொடுத்து அந்தத் திருப்பணி வேலைகளை நடத்தி கும்பாபிஷேகத்தையும் முடிப்பார். இவர் தங்கள் ஊருக்கு வந்து போனாலே திருப்பணி வேலைகள் தானாய் நடக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் இருக்கிறது. எப்படி இது சாத்தியமாகிறது?

‘‘புதிதாக நூறு கோயில்களை கட்டுவதைவிட, ஒரு பழைய கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்துவது ரொம்ப விசேஷம். அந்த வகையில் எனக்குத் தெரிந்து பல கோயில்களுக்கு 12 வருட இடைவெளியில் இதுவரை மூன்றுமுறை கூட திருப்பணி முடித்து குடமுழுக்கு செய்திருக்கிறோம். என் கையில் எதுவும் இல்லை. என்னை வைத்து இந்தக் காரியத்தை முடிக்க வேண்டும் என இறைவன் நினைக்கிறான். அன்பர்கள் அதற்கு தோள்கொடுக்கிறார்கள். அதனால் திருப்பணி வேலைகளை தடங்கல் இல்லாமல் செய்ய முடிகிறது’’ தன்னடக்கத்துடன் சொன்னார் நாராயணன் செட்டியார்.

தமிழுக்கும் சைவத்துக்கும் செய்துவரும் சேவையை பாராட்டும் விதமாக இவருக்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கின்றனர் நாராயணன் செட்டியாரின் அபிமானிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x