Published : 06 May 2022 08:13 AM
Last Updated : 06 May 2022 08:13 AM

பணி குறித்த அரசின் உத்தரவை எதிர்த்து ஊழியர்கள் சார்பில் சங்கங்கள் வழக்குத் தொடர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: பணி தொடர்பான விவகாரங்களில் அரசின் உத்தரவை எதிர்த்து ஊழியர்கள் சார்பில் சங்கங்கள் வழக்குத் தொடர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நில அளவைப் பணிகளை கிராம நிர்வாக அலு
வலர்களும் மேற்கொள்வதற்கு அனுமதியளித்து கடந்த 2020-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து தமிழ்நாடு நில அளவையர்கள் மத்திய சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், நில அளவைப் பணிகளை மேற் கொள்வதற்கு என நிபுணத்துவம் பெற்றுள்ள நில அளவையர்கள் இருக்கும்போது, எவ்வித தொழில் நுட்பப் பயிற்சியும் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்களை நில அளவைப் பணியில் ஈடுபடுத்துவது சட்டவிரோதம் என்பதால் இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும், என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பாக நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி நில அளவையர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் என இருபதவிகளுக்கும் அடிப்படைக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தான். நில அளவைப் பணியில் ஈடுபட கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சர்வே எண்களின் உட்பிரிவுடன் பட்டா வழங்கக் கோரி ஆன்லைனில் விண்ணபித்த மனுக்களில் 6.40 லட்சம் மனுக்கள் நிலுவையில் இருந்து வருவதால் அதை விரைந்து வழங்க ஏதுவாக கிராம நிர்வாக அலுவலர்களும் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நில அளவையர் சங்கம் சார்பில் வழக்குத் தொடர உரிமையில்லை, என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார் பிறப்பித்துள்ள உத்தரவில், பணி தொடர்பான விவகாரங்களில் அரசின் உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஊழியர்கள்தான் வழக்குத் தொடர வேண்டும். தனது உறுப்பினர்களுக்காக நில அளவை ஊழியர்கள் சங்கம் இந்த வழக்கைத் தொடர எந்தவொரு அடிப்படை முகாந்திரமும் இல்லை. ஒருவேளை சங்க உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாட முடியாதபடி ஏழ்மை நிலையில் அல்லது சமூகப் பொருளாதாரரீதியில் பின்தங்கி உள்ளனர் என்றால் அப்போது உறுப்பினர்களுக்காக சங்கம் வழக்கு தொடரலாம். இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x