தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு வியாழன் முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு வியாழன் முதல் விண்ணப்பம்
Updated on
1 min read

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத்தேர்வில் இருந்து மாநிலங்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விதிவிலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தின்படி, தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் வரும் மருத்துவ இடங்களுக்கு மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுத தேவையில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் வழக்கமான கலந்தாய்வு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இது குறித்து சென்னையில், இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா, "மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு கலந்தாய்வு முறைப்படி நடைபெறும். மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வு குறித்து குழப்பமடைய வேண்டாம்.

மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விநியோகிக்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை நேரில் பெறலாம். ஜூன் 6 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 7 மாலை 5 மணி வரை அளிக்கலாம். ஆன்லைனில் இன்று முதலே விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 18-ல் நடைபெறுகிறது. மாணவர்கள் தர வரிசைப் பட்டியல் ஜூலை 17-ல் வெளியிடப்படுகிறது" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in