Published : 07 May 2016 12:47 PM
Last Updated : 07 May 2016 12:47 PM

திருச்செந்தூர் தொகுதிக்கு தமிழகம் முழுவதும் வாக்கு சேகரிப்பு: சரத்குமாரின் விநோத பிரச்சாரத்தால் அதிமுக திகைப்பு

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்களில் நடிகர் சரத்குமார், தான் போட்டியிடும் திருச்செந்தூர் தொகுதிக்காகவும் சில நிமிடம் பிரச்சாரம் செய்வதால் அதிமுக வேட்பாளர்கள், நிர்வாகிகள் திகைப்பு அடைந்துள்ளனர்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார், அதிமுக கூட்டணி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர், அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் தொடர்ந்து மூன்றுமுறை வெற்றி பெற்றுள்ளதால் தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், திருச்செந்தூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

சரத்குமார் தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருவதால் திருச்செந்தூர் தொகுதியில் பிரச்சாரப் பணிகளை அவரது மனைவி ராதிகா சரத்குமார் மேற்பார்வையில் உள்ளூர் அதிமுகவினர், அவரது கட்சியினர் கவனித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் சரத்குமார் மதுரையில் கே. புதூர் பஸ்நிலையத்தில் அதிமுக வேட்பாளர் வி.வி. ராஜன் செல்லப்பாவை ஆதரித்து பேசுகையில், கலர் கலராக உடைகளை மாற்றத் தெரிந்த மு.க. ஸ்டாலின் அரசியலில் திறமைகளை வளர்த்துக் கொள்ளவில்லை. கடந்த ஆட்சியில் தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளும்படி கேட்கிறார். நீங்கள் மன்னிக்கக் கூடிய தவறையா செய்துள்ளீர்கள். கூட்டணி வைக்கவில்லை என்றதும், அதிமுக அரசு மீது பாஜக தலைவர்கள் ஆத்திரத்தில் விமர்சனம் செய்கின்றனர் என்றார்.

பிரச்சாரத்தை முடித்துவிட்டு வேனில் புறப்பட்டபோது திடீரென மைக்கை பிடித்த சரத்குமார், சுயநலமாக உங்களிடம் ஒன்று கேட்கிறேன். நான் திருச்செந்தூரில் போட்டியிடுகிறேன். அந்த தொகுதியில் உங்கள் உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் வசித்தால் அவர்களுக்கு போன் செய்து, எனக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள் என்றார். இதேபோல, இவர் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடமெல்லாம் தனக்காகவும் பிரச்சாரம் செய்கிறார். சரத்குமாரின் இந்த பிரச்சாரத்தால் அவருடன் செல்லும் அதிமுக வேட்பாளர்கள், நிர்வாகிகள், நமக்காக பிரச்சாரம் செய்ய வந்த இடத்தில் அவருக்காக பிரச்சாரம் செய்கிறாரே என திகைப்படைந்துள்ளனர்.

சரத்குமார் கணக்கில் தேர்தல் செலவு?

இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: பொதுவாகவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக இருப்பார்கள். அவர்கள் உறவினர்கள், பெற்றோர் சொந்த ஊரில் வசிப்பார்கள். அதனால், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வசித்தால் அவர்கள் மூலம் அவர்கள் உறவினர், பெற்றோர், நண்பர்கள் வாக்குகளை கவர பிரச்சாரம் செய்கிறார் என்றனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நட்சத்திர பேச்சாளர்கள் எந்தெந்த வேட்பாளர்கள் பெயரைக் குறிப்பிட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனரோ, அந்த பிரச்சாரக் கூட்டத்துக்கான செலவு, அந்த வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். சரத்குமார் மதுரையில் தனக்கு வாக்கு சேரித்த வீடியோ பதிவை ஆய்வு செய்து விசாரித்து வருகிறோம் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x