Published : 05 May 2022 04:39 PM
Last Updated : 05 May 2022 04:39 PM

5 வயது வரை இலவச பயணம், இருவழிப் பயணத்துக்கு 10% சலுகை... - தமிழக போக்குவரத்துத் துறையின் 15 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை, இயக்கூர்திகள் சட்டங்கள் - நிருவாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த போக்குவரத்துத்துறை, இயக்கூர்திகள் சட்டங்கள்-நிருவாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பயண கட்டணச் சலுகை அனுமதி சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குதல், பேருந்து முனையங்களில் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாட்டு முறை, இணையவழிப் பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான கட்டணச் சலுகை, பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் போக்குவரத்துத்துறை, இயக்கூர்திகள் சட்டங்கள்-நிருவாகத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார். அவர் வெளியிட்ட 15 முக்கிய அறிவிப்புகள்:

போக்குவரத்துத் துறை

> தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை அறிமுகப்படுத்துதல்.

மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூர்) லிமிடெட், கோயம்புத்தூர் ஆகிய மூன்று கழகங்களின் அனைத்து பேருந்துகளுக்கும் தேசிய பொது பயன்பாட்டு அட்டையுடன் அனைத்து பொது போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை / பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை, ரூ.70 கோடி செலவில் KfW ஜெர்மனி மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் அறிமுகப்படுத்தப்படும்.

> பயண கட்டணச் சலுகை அனுமதி சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குதல்.

பயண கட்டணச் சலுகை பெறுபவர்கள் (மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயாளிகள் மற்றும் இதர) பயண கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை பெறுவதற்கு (100% இலவசம், 75%, 50%, மூன்றில் ஒரு பங்கு, இலவச வில்லை (Free Token) போன்றவை) அரசுப் போக்குவரத்து கழகங்களின் பயணச்சீட்டு வழங்கும் இடங்களுக்கு, பணிமனைகளுக்குச் செல்கின்றனர்.

பயணச் சீட்டுகள் பெறுவதற்காக பயணம் மேற்கொள்வதை குறைக்கவும், எளிதாகவும், வசதியானதாகவும் பயணச் சீட்டுகள் பெறுவதற்கு அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளம் (web portal) அல்லது இ.சேவை மையம் வாயிலாக இணையதள பயணச்சீட்டு வழங்கும் ஏற்பாட்டுமுறை அறிமுகப்படுத்தப்படும்.

> சென்னை , திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல்.

> அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும் பராமரிப்பதற்காகவும் " அரசு நடமாடும் பணிமனைகளை" உருவாக்குதல்.

> அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறை தீர்க்கும் உதவி மையம்.

> பேருந்து முனையங்களில் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாட்டு முறை.

பயணம் செய்யும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் (ரூ.3 கோடி செலவில் KfW ஜெர்மனி மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன்) பேருந்துகளின் வருகை, புறப்பாடு குறித்த நிகழ்நேரத் தகவல்கள் மதுரை மற்றும் கோவை நகரங்களில் மொத்தம் 16 பேருந்து முனையங்களில் இணையவழி தகவல் அமைப்பு மூலமாக காட்சிப்படுத்தப்படும்.

> தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சுமைப் பெட்டிகளை வாடகைக்கு விடுதல்.

> இணையவழிப் பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான கட்டணச் சலுகை.

பயணிகள் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கவும், தனியார் பேருந்துகள், ரயில் போன்றவற்றில் பயணிக்கும் பயணிகளை ஈர்க்கவும், விழா நாட்கள் நீங்கலாக இதர நாட்களில், இணையவழிப் பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும்.

> 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் செயல்படுத்துதல்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். (தற்போது, 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.)

> திருச்சிராப்பள்ளி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மையம் அமைத்தல்.

இயக்கூர்திகள் சட்டங்கள் - நிருவாகம்

> பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாக வராமலேயே ஓட்டுநர் உரிமத்தில் வாகன வகையினை ஒப்புவிப்பு செய்தல், போக்குவரத்து அல்லாத வாகன உரிமை மாற்றத்தினை தெரிவித்தல் மற்றும் பதிவுச் சான்றில் தவணைக் கொள்முதல் விவரத்தினை மேற்குறிப்பு செய்தல் ஆகிய சேவைகளை கணினி வழியாகப் பெறுதல்.

போக்குவரத்துத் துறையில் பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை நேரடியாக அணுகாமல் கீழ்க்கண்ட சேவைகளை கணினி வழியாகப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  • ஓட்டுநர் உரிமத்தில் ஏதேனும் வாகன வகையினை ஒப்புவிப்பு செய்தல்.
  • போக்குவரத்து அல்லாத வாகன உரிமை மாற்றத்தினை இணையத்தில் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவித்தல்.
  • பதிவுச் சான்றில் தவணைக் கொள்முதல் விவரத்தினை மேற்குறிப்பு செய்தல்.


> பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்துதல்.

பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்துவதற்கு ஏதுவாக (பள்ளி வாகனங்கள் ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள், 2012-ல் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

> ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் (பகுதி அலுவலகம்) உருவாக்குதல்.

> திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் (பகுதி அலுவலகம்) உருவாக்குதல்.

> சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தினை (பகுதி அலுவலகம்) வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்துதல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x