

சென்னை: பொதுப்பணித் துறையின் தலைமைக் கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.38 கோடி மதிப்பிலான, 7 கார்கள் மற்றும் 22 வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பொதுப்பணித் துறையின் தலைமைக் கட்டிடக் கலைஞர், கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் செயற் பொறியாளர்கள் பயன்பாட்டிற்காக 2 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 புதிய கார்கள் மற்றும் 22 புதிய வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 5 வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 4) வழங்கினார்.
2021-2022 ஆம் ஆண்டிற்கான பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கையில், தலைமைக் கட்டடக் கலைஞர், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்களுக்கு பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய கார்கள் மற்றும் வாகனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 7 புதிய கார்கள் மற்றும் 22 புதிய வாகனங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் பொதுப்பணித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.