குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு பிறகும் குழந்தை: இழப்பீடு கேட்டு ராமேசுவரம் பெண் வழக்கு

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு பிறகும் குழந்தை: இழப்பீடு கேட்டு ராமேசுவரம் பெண் வழக்கு
Updated on
1 min read

மதுரை: ராமேசுவரத்தை சேர்ந்த நந்தினி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். 2010-ல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால் மீண்டும் கர்ப்பம் தரித்தேன். இதை ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தெரிவித்தபோது கருவை கலைக்குமாறு கூறினர். அதற்கு நான் மறுத்துவிட்டேன்.

2021 டிச. 17-ல் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொப்புள் கொடியை மட்டுமே கத்தரித்த செவிலியர்கள் வேறு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை. இதனால் டிச. 20-ல் குழந்தை இறந்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களும், செவிலியர்களும் முறையாக சிகிச்சை அளிக்காததே குழந்தை இறக்க காரணமாகும்.

எனவே, எனக்கு முறையாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யாத மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக அரசு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 21-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in