

விழுப்புரம்: மரக்காணத்தில் 2013-ம் ஆண்டுநடைபெற்ற கலவரம் தொடர்பானவழக்கில், அரசு தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம்ஆண்டு ஏப்ரல் 23-ல் வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழாநடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்துக்குச் சென்றனர்.
அப்போது மரக்காணம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், இளைஞர் சங்க மாநாட்டுக்குச் சென்ற பாமகவினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது கலவரமாக மாறியது.
இதில் சாலையில் நின்றிருந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசுப் பேருந்துகள் உட்பட சிலவாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுகுறித்து மரக்காணம் போலீஸார் பாமகவினர் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து 20 பேர் மீதுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண்-2-ல் நீதிபதி சுதா முன்பு நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில்,அரசு தரப்பில் போதுமான சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் இவ்வழக்கில் அனைவரையும் விடுதலை செய்வதாக தெரிவித்தார். இவ்வழக்கில் பாமக தரப்பில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜரானார்.