Published : 22 Apr 2022 10:40 AM
Last Updated : 22 Apr 2022 10:40 AM

மே 8-ல் தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சென்னை: வட மாநிலத் தொழிலாளர்களால் சென்னை ஐஐடியில் கரோனா பரவியதாகக் கூறியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், மே 8-ல் தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் நேற்று வரை 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐஐடியில் உள்ள அனைவருக்கும் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஐஐடியில் மொத்தம் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட மாநிலங்களில் இருந்து வந்த பணியாளர்கள் மூலம் ஐஐடியில் கரோனா தொற்று பரவி உள்ளதாக மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரிப்பன் மாளிகையில் அவர் அளித்த பேட்டியில், "டெல்லி, ஹரியானா உத்திரப்பிரதேசம் ஆகிய மற்ற மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் பாதுகாப்பான சூழல் என்பது அவசியமான ஒன்று. ஐஐடி வளாகத்தில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்கு உறுதியானவர்கள் பாதுகாப்பாக தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக ஐஐடியில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.

எனவே நெடுஞ்சாலை பணிகள் மற்றும் கட்டிடப் பணிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பணியாட்களை அழைத்து வரும் இடைத்தரகர்கள் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் பணியாட்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாதோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது. இவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விதமாக மே 8 ஆம் தேதி தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது" என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x