உதகையில் பழங்குடியின மாணவியிடம் அத்துமீறியதாக பள்ளி தலைமையாசிரியரை கைது செய்யக் கோரி தர்ணா

உதகையில் பழங்குடியின மாணவியிடம் அத்துமீறியதாக பள்ளி தலைமையாசிரியரை கைது செய்யக் கோரி தர்ணா
Updated on
1 min read

உதகை: பழங்குடியின மாணவியிடம் அத்துமீறியதாக தலைமையாசிரியரை கைது செய்யக் கோரி, உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோத்தரின பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை அருகே எம்.பாலாடாவில் உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியராக சுப்பிரமணி (58) பணிபுரிந்து வந்தார். இவர் பிளஸ் 2 படிக்கும் பழங்குடியின மாணவி அணிந்து வந்த துப்பட்டாவை இழுத்து தகாத முறையில் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோருடன் மாணவி சென்று, உதகை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சுப்பிரமணி மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். உதகை ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் ஞானரவி மற்றும் போலீஸார் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புகார் அளித்து 18 நாட்களுக்கு மேலாகியும் சுப்பிரமணியை கைது செய்யாததை கண்டித்து, உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோத்தர் பழங்குடியின பெண்கள் நேற்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, ‘பழங்குடியின மக்களுக்காக நடத்தப்படும் ஏகலைவா உண்டு, உறைவிட பள்ளி முத்தோரை பாலாடா பகுதியில் உள்ளது. விடுதி வளாகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக பாதுகாப்புக்கு காவலர் இல்லை. சிசிடிவி., கண்காணிப்பு கேமராக்களும் இல்லை. இந்த சூழலில் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த சுப்பிரமணி, பழங்குடியின மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதுதொடர்பாக புகார் அளித்த போதும், காவல்துறையினர் வழக்குபதிவு செய்ய தாமதம் காட்டினர். நீண்ட போராட்டத்துக்கு பின் வழக்குபதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை.

தலைமையாசிரியர் மீது புகார் அளித்த நிலையில், பள்ளியில் உள்ள ஒரு பெண் ஆசிரியர் உட்பட சில ஆசிரியர்கள், பழங்குடியின மாணவ, மாணவிகளை இழிவாக பேசி வருகின்றனர். எனவே தலைமறைவாக உள்ள தலைமையாசிரியரை கைது செய்ய வேண்டும். இழிவாக பேசி வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்களை அழைத்து, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாட்களுக்குள் தலைமையாசிரியர் கைதுசெய்யப்படுவார். ஏகலைவா பள்ளியில் பழங்குடியின மாணவ, மாணவிகளை இழிவாக பேசி வருபவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தனர்.

இதனால், சிறிது நேரம் கழித்து பெண்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in