

திருப்பூர்: திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவியின் தந்தை சங்கர் என்பவர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "அவிநாசி அருகே ராக்கிபாளையத்தில் வசித்து வருகிறோம். இப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். மகள் பள்ளிக்கு செல்லும்போது தினமும் நெற்றியில் திருநீறு பட்டையும், ருத்ராட்சையும் அணிந்து செல்வாள். மகளின் தமிழாசிரியை திலகவதி, ‘பட்டை போட்டு வருகிறாய். படிக்கத் தெரியாதா?’ என கேள்வி எழுப்புகிறார். மேலும், வகுப்பு தொடங்கும் முன்பு இயேசுநாதரை வழிபடும்படி கூறியுள்ளார்.
நெற்றியில் திருநீறு பட்டை அணிந்தது தொடர்பாக ஆங்கில ஆசிரியை கல்பனாவும் திட்டியுள்ளார். எங்களின் மத உணர்வை புண்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, கல்வித் துறை அதிகாரிகளை விசாரிக்க போலீஸார் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக மாணவிகள் 45 பேரிடம் பள்ளி தலைமையாசிரியர் விசாரித்தார். அவரைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் நேற்று மாலை வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
பள்ளி தரப்பில் கூறும்போது, ‘‘மாதிரித் தேர்வில் மாணவி போதிய மதிப்பெண்கள் எடுக்காத நிலையில், இரண்டு ஆசிரியர்களும் திட்டியுள்ளனர். இருவரும் கிறிஸ்தவர்கள் என்பதால், பள்ளி மாணவிகளிடம் முதல்கட்டமாக விசாரித்தோம்’’ என்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் கூறும்போது, "பள்ளியில் ஆசிரியைகள் நடந்துகொண்டது தொடர்பாக விசாரித்து வருகிறோம். விசாரணை இன்னும் முழுமை அடையவில்லை" என்றார்.