

திருப்போரூர்: செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் கோடை வெப்பத்தால் தண்ணீரின்றி வறண்டுள்ளதால், வன விலங்குகளின் குடிநீர்த் தேவைக்காக டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளை வனத்துறை தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியில் 7,285 ஏக்கர், திருப்போரூரில் 5,350 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதிகள் அமைந்துள்ளன. மலைகளின் இடையே உள்ளவனப்பகுதிகளில் சிறுத்தை, மான்இனங்கள், கழுதைப் புலி, நரி,மயில் உட்பட பல்வேறு விதமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கிராமப்புற பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.
வனவிலங்குகளின் குடிநீர்த் தேவைக்காக வனப்பகுதிகளில் ஆங்காங்கே கசிவுநீர் குட்டை மற்றும் குடிநீர்த் தொட்டிகளை வனத்துறை அமைத்துள்ளது. எனினும், கோடைக்காலம் என்பதால்அவை தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால், வனவிலங்குகள் குடிநீருக்காக நீர்நிலைகளைத் தேடி ஊருக்குள் புகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதனால், வனவிலங்குகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பும் பணிகளை வனத் துறை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடைக்காலத்தில் வனங்களில் உள்ள நீர்நிலைகள் வறண்டுகாணப்படுகின்றன. அதனால், வனவிலங்குகள் குடிநீருக்காக ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், குடிநீருக்காக வனத்திலிருந்து வெளியே வரும் மான்கள் தெரு நாய்களிடம் சிக்கிக் காயமடைந்தும் சில இடங்களில் சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் சிக்கியும் உயிரிழக்கும் நிலை உள்ளது. இதனால், வனவிலங்குகளின் குடிநீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை, டிராக்டர் மூலம் டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பி வருகிறோம். சுழற்சி முறையில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. எனினும், மழை பெய்தால் மட்டுமே வன விலங்குகளின் முழு தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்றனர்.