Published : 17 Apr 2022 05:15 AM
Last Updated : 17 Apr 2022 05:15 AM

சேலம் வழியாகச் செல்லும் திருவனந்தபுரம் - மும்பை ரயில் 23-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்

சேலம்

சேலம் வழியாகச் செல்லும் திருவனந்தபுரம்-மும்பை வாராந்திர விரைவு ரயில் வரும் 23-ம் தேதி முதல் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் அனைத்து ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. தற்போது, கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், மீண்டும் பல்வேறு வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து சேலம் வழியாக மும்பை செல்லும் திருவனந்தபுரம் மும்பை சிஎஸ்எம்டி வாராந்திர அதிவிரைவு ரயில் (16332) மீண்டும் வரும் 23-ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு வர்கலா, சிவகிரி, கொல்லம், காயன்குளம், ஹரிபாத், ஆலப்புழா, சேர்த்தலா, எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், ஒட்டபாளையம், பாலக்காடு, போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மாலை 4.07 மணிக்கு சேலம் வந்தடையும்.

சேலத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், இந்துப்பூர், தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல் அடோனி, மந்த்ராலயம், ரெய்ச்சூர், சோலாப்பூர், தானே, தாதர் வழியாக (24-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு மும்பை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் மும்பை சிஎஸ்எம்டி திருவனந்தபுரம் வாராந்திர விரைவு ரயில் (16331) வரும் 24-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு தாதர், குண்டக்கல், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக திங்கள்கிழமை (25-ம் தேதி) இரவு 8.42 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, கோவை, போத்தனூர் வழியாக செவ்வாய்க்கிழமை (26-ம் தேதி) காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x