குடிநீர் தொட்டியில் விஷவாயு பரவியிருந்ததா? - ஆவடி அருகே தொட்டியில் இறங்கிய 3 பேர் உயிரிழப்பு

குடிநீர் தொட்டியில் விஷவாயு பரவியிருந்ததா? - ஆவடி அருகே தொட்டியில் இறங்கிய 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடிஅருகே திருமுல்லை வாயலைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(50). இவரது மனைவி ரதி(43). இவர்களுக்கு காயத்ரி, சங்கீதா என2 மகள்கள்,பிரதீப்குமார் என்ற மகன் உள்ளனர். இதில், காயத்ரி திருமணமாகி, தாம்பரத்தில் வசித்து வருகிறார். சங்கீதா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மகன் பிரதீப்குமார்(18) பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிரேம்குமார் வீட்டின் முன்புறம் தரைக்குக் கீழே குடிநீரைச் சேமிக்கும் தொட்டியைத் தூய்மைப்படுத்தும் பணியில் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் சுத்தப்படுத்த பிளிச்சீங் பவுடரை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இரவில் பிரேம்குமார் குடும்பத்தினர் தொட்டியில் தண்ணீரை நிரப்பியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை குடிநீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதால், பிரேம்குமார் தொட்டியைத் திறந்து உள்ளே இறங்கியுள்ளார். அப்போது, அவர் மூச்சுத் திணறி தண்ணீருக்குள் விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த அவரது மனைவிரதி, மகன் பிரதீப்குமாரை அழைத்து, தொட்டியினுள்ளே சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். ஆகவே, பிரதீப்குமார் தொட்டிக்குள் இறங்கி தந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அவரும் மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, பிரேம்குமாரின் எதிர் வீடுகளைச் சேர்ந்த பிரமோத்குமார்(40), சாரநாதன்(50) ஆகியோர், குடிநீர்த் தொட்டியில் இறங்கிதந்தை, மகனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களும் மூச்சுத் திணறி மயங்கி தொட்டிக்குள் விழுந்துள்ளனர்.

ஆகவே, அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பிறகு, பிரேம்குமார், பிரதீப்குமார் ஆகிய இருவரும் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், பிரமோத்குமார், சாரநாதன் ஆகிய இருவரும் ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இதில், பிரேம்குமார், பிரதீப்குமார்மற்றும் பிரமோத்குமார் ஆகியோர் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். சாரநாதன் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து, திருமுல்லைவாயல் போலீஸார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை,கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குடிநீர் தொட்டியில் விஷவாயு பரவி இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in