சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும்: அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை

சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும்: அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை
Updated on
1 min read

சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தப்பட்டதற்கு காரணம் மத்திய அரசு என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.அதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய அரசு திட்டங்களின் கீழ் உதவிகள் பெற வேண்டுமெனில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டம் பிரிவு 78-ன் படி அனைத்து வரிகளையும் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மன்றத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற மத்திய அரசு நிபந்தனை விதிப்பது அதிகார வரம்பு மீறிய செயலாகும்.

மத்திய அரசின் திட்டங்களுக்கே மாநிலங்களிடம் இருந்து தான் நிதியே கிடைக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல், மத்திய அரசு திட்டங்களின் கீழ் உதவிகள் பெற வேண்டுமெனில் சொத்து வரி உயர்த்த வேண்டும் என நிபந்தனை விதிப்பது கண்டனத்துக்குரியது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வு, வேலையின்மை போன்ற பல நெருக்கடிகளால் மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பது, சாமானியர்களை மேலும் கடுமையாக பாதிக்கும்.

எனவே, சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை காரணமாக கூறி சொத்து வரி வரியை உயர்த்தாமல், ஒன்றிய அரசிடம் தேவையான நிதியை கேட்டு பெற வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசுக்கு செல்லும் வருவாயில், சம அளவு வருவாய் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in