Published : 01 Apr 2022 06:30 PM
Last Updated : 01 Apr 2022 06:30 PM

கடம்பூர் பேரூராட்சி தேர்தல் தகராறு: ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தகராறு தொடர்பான புகார்கள், அதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், சாட்சியங்கள் உள்ளிட்டவை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி தேர்தலை ரத்து செய்து பிப்ரவரி 7-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பேரூராட்சியில் உள்ள 3 வார்டுகளின் சுயேச்சை வேட்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 1-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, 2-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ்வரி, 11-வது வார்டு வேட்பாளர் சிவகுமார் தாக்கல் செய்த மனுக்களில், 3 வார்டுகளிலும் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஜெயராஜ், சண்முகலட்சுமி, சின்னதுரை ஆகியோரின் வேட்புமனுக்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனையின் போது 3 வார்டுகளிலும் முன்மொழிந்ததாக கூறப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் 3 திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

எனவே வேறு வேட்பாளர்கள் யாரும் இல்லாத நிலையில் தங்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்காமல், ஒட்டுமொத்த பேரூராட்சியின் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிப்ரவரி 7-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. அரசியல் நிர்பந்தம், நெருக்கடி காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே 3 வார்டுகளின் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து தங்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், இரண்டு வேட்பாளர்கள் கடத்தப்பட்டது, அதிகாரிகள் மீதான தாக்குதல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், யாரும் கடத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களே கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடம்பூர் பேரூராட்சி தேர்தல் தொடர்பான புகார்கள், பதிவான வழக்குகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x