Last Updated : 01 Apr, 2022 04:58 PM

 

Published : 01 Apr 2022 04:58 PM
Last Updated : 01 Apr 2022 04:58 PM

புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்

புதுச்சேரி: புதுச்சேரி இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ள வீட்டு உபயோக மின் கட்டணங்களுக்கான விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.2022--2023ம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பலரும் இக்கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு மற்றும் தனியார் நிலுவையில் வைத்துள்ள பல கோடி மின்கட்டண பாக்கியை வசூலிக்கவும் கோரினர்.

அப்போது கரோனா கால சூழல் என்பதால் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்தனர். ஆனால், அப்போது தெரிவிக்கப்பட்ட உத்தேச கட்டணமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறிவித்ததுடன், சில பிரிவுகளில் கட்டணத்தை உயர்த்தியும் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படிபுதுவையில் இன்று முதல் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 100 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் 35 காசுகள் உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101 யூனிட்டில் இருந்து 200 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் 30 காசுகள் உயர்ந்து ரூ.2.90 ஆகவும் உயர்ந்துள்ளது.

201 முதல் 300 யூனிட்டுக்குள் வரையிலான பயன்பாட்டிற்கு ஒரு யூனிட்டுக்கு 35 காசுகள் உயர்ந்து ரூ. 5 ஆகவும், 300 யூனிட்டுகளுக்கு மேலான பயன்பாட்டிற்கு, 40 காசுகள் உயர்ந்து ரூ. 6.45 ஆகவும் கட்டணம் உயர்ந்துள்ளது.

அதேவேளையில் வர்த்தகம், விவசாய மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x