Published : 31 Mar 2022 09:29 AM
Last Updated : 31 Mar 2022 09:29 AM

‘பீஸ்ட்’ திரைப்பட கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்: பால் முகவர்கள் சங்கத் தலைவர் டிஜிபியிடம் புகார்

சென்னை: தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு மின்னஞ்சல் மூலம் நேற்று அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் `பீஸ்ட்' திரைப்படம் வெளியாக இருப்பதால், அதைக் கொண்டாட ரசிகர்கள் பலரும் கடந்த சில தினங்களுக்கு முன் திரண்டு, திரைப்பட கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

அப்போது 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேனில் பாலை நிரப்பி, அதை ஒரு கையால்தூக்கிக்கொண்டு, `கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலையில் தங்களின் குடும்பத்தினரைப் பற்றியோ அல்லது தங்களின் உயிரைப் பற்றியோ, அருகில் உள்ள சக ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் அவரவர் எதிர்காலம் குறித்தோ சிறிதளவும் கவலைப்படாமல் கட்-அவுட் மீது ஏறி, நடிகர் விஜய் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளனர்.

ஏற்கெனவே தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானபோது, அவர்களின் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய மேலே ஏறியபோது, அவை சரிந்து விபத்துஏற்பட்டதால், பல்வேறு தருணங்களில் சில ரசிகர்கள் உயிரிழந்ததுடன், பல ரசிகர்கள் கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.

மிகவும் ஆபத்தான நிலையிலும், அந்த கட்-அவுட் சரிந்தால் அருகில் உள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்த பின்னரும், நடிகர் விஜய் நடித்த `பீஸ்ட்' படத்தின் 100 அடிக்கும் மேலான கட்-அவுட்டின் மீது ஏறி மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் மீதும், ரசிகர்களின் இந்த அஜாக்கிரதையான செயலைக் கண்டிக்காத, தனது ரசிகர்களை நல்வழிப்படுத்த தவறிய நடிகர் விஜய் மீதும் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் திரையரங்க வளாகங்களில் எந்த ஒரு நடிகரின் கட்-அவுட்டுகளின் மீது ஏறி மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். இவ்வாறு புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x