Last Updated : 29 Mar, 2022 08:18 PM

 

Published : 29 Mar 2022 08:18 PM
Last Updated : 29 Mar 2022 08:18 PM

தமிழக பேரூராட்சி டெண்டர்களில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் வரும் காலங்களில் பேரூராட்சி டெண்டர்களில் தமிழ்நாடு டெண்டர் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பேரூராட்சிகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் (தெரு விளக்குகள், குப்பைத் தொட்டிகள், தண்ணீர் விநியோக பொருட்கள்) வாங்க டெண்டர் விடப்படும். இது தொடர்பாக ஏற்கெனவே ஒப்பந்தங்கள் எடுத்த நிறுவனங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்ததாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. டெண்டர் அறிவிப்பும் முறையாக வெளியிடப்படுவதில்லை.

எனவே, சிவகங்கை, தேனி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பேரூராட்சிகளில் ஒப்பந்தங்கள் வெளியிடும்போது முந்தைய ஒப்பந்ததாரர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், ஒப்பந்த அறிவிப்புகளை முறையாக வெளியிடவும், இ-டெண்டர் முறையை பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘பல மாவட்டங்களில் டெண்டர் விடப்பட்டுவிட்டது. சில மாவட்டங்களில் மட்டும் டெண்டர் பணிகள் நிலுவையில் உள்ளது’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘வரும் காலங்களில் பேரூராட்சிகளில் தமிழ்நாடு டெண்டர் சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றி வெளிப்படைத் தன்மையுடன் டெண்டர் விட தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x