Last Updated : 29 Mar, 2022 12:36 PM

 

Published : 29 Mar 2022 12:36 PM
Last Updated : 29 Mar 2022 12:36 PM

முழு அடைப்புப் போராட்டம் | புதுச்சேரியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

படங்கள்: எம்.சாம்ராஜ்.

புதுச்சேரி: முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, புதுச்சேரியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, தனியார் பேருந்துகள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டத் தொகுப்பை கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதேபோல் புதுச்சேரியிலும் திமுக, காங்கிரஸ், சிபிஐ, விசிக உள்ளிட்ட மதசாற்பற்ற கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நேற்று வேலை நிறுத்தமும், இன்று முழு அடைப்பு (பந்த்) போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தன. இதன்படி நாடு முழுவதம் முதல் நாள் போராட்டம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 2ம் நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று பொது வேலை நிறுத்தத்துடன் சேர்த்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கிராமப்புறங்களிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. ஆட்டோ, டெம்போ போன்றவைகளும் ஓடவில்லை. ஒருசில தமிழக அரசு பேருந்துகள் மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பிரதான சாலைகள், முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்த முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திமுக சார்பில் அண்ணா சிலை அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அஜந்தா சிக்னல் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பிலும், 9 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் புதிய பேருந்து நிலையம்,ராஜா திரையரங்கம், திருக்கனூர், பாகூர், இந்திரா காந்தி சிலை, அண்ணா சிலை, சேதராப்பட்டு, வில்லியனூர், தவளக்குப்பம், மதகடிப்பட்டு, காரைக்கால், அதிதி ஓட்டல் அருகில் ஆகிய 12 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டங்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x