இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர் 22 பேர் விடுதலை: செஷல்ஸ் தீவில் இருந்து விடுவிக்கப்பட்ட 56 பேர் வீடு திரும்பினர்

யாழ்ப்பாணம் சிறையில் இருந்து சங்கிலி மற்றும் கைவிலங்கிடப்பட்டு ஊர் காவல்துறை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட  தமிழக மீனவர்கள்.
யாழ்ப்பாணம் சிறையில் இருந்து சங்கிலி மற்றும் கைவிலங்கிடப்பட்டு ஊர் காவல்துறை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட தமிழக மீனவர்கள்.
Updated on
1 min read

ராமேசுவரம்/நாகர்கோவில்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 24 அன்று நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, கீச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 9 பேர் மற்றும் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேட்டைச் சேர்ந்த 13 பேர் என மொத்தம் 22 மீனவர்களை நடுக்கடலில் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நேற்று வந்தது. அப்போது மீனவர்கள் 22 பேரையும் இரும்புச் சங்கிலி மற்றும் கை விலங்கிட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன் இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையில்பேரில், அவர்களை விடுதலை செய்தார். மேலும் படகின் உரிமையாளர்கள் ஜூன் 24-ம் தேதி ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

இதேபோன்று, கன்னியா குமரி மாவட்ட மீனவர்கள் விசைப்படகில் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். சமீபத்தில் கொச்சி மற்றும் தேங்காய்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக செஷல்ஸ் தீவு பகுதியில் அந்நாட்டு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 5 விசைப்படகுகளில் சென்ற 61 மீனவர்கள் கைதாகினர்.மத்திய அரசின் நடவடிக்கையால் இவர்களை விடுவிக்கும் பணி நடந்தது. 61 மீனவர்களில் படகை ஓட்டிச் சென்ற 5 மீனவர்கள் மட்டும் 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீதம் உள்ள 56 மீனவர்களும் அபராதம் ஏதும் இன்றி விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்திய கப்பல் படையின் விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து, 56 பேரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in