

வரும் நிதியாண்டில் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி தர வேண்டும் என்றுமத்திய நிதியமைச்சரிடம் புதுச்சேரிசட்டப்பேரவைத் தலைவர் செல்வம்கோரியுள்ளார். அதிருப்தியில் இருந்த சுயேச்சை எம்எல்ஏ வும் அவருடன் சென்று முக்கி யமானவர்களை சந்தித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அண்மையில் டெல்லி சென்றார். அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண்ரெட்டி, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், மீனவளத்துறை அமைச்சர் முருகன்ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதுபற்றி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறுகையில், “மத்திய நிதி அமைச்சரிடம் புதுச்சேரியில் நிலவும் நிதிநிலை பற்றி எடுத்துக்கூறி, வரும் நிதியாண்டில் புதுச்சேரிக்கு கூடுதலாக நிதி தர கோரினேன். சுற்றுலாத்துறை அமைச்சரிடம் நல்லவாடு, நரம்பை, காலாப்பட்டு ஆகிய கடலோர கிராமங்களில் மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தில் கீழ் சுற்றுலா தலமாக மேம்படுத்த நிதி ஒதுக்கித் தர கோரினேன்” என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள சுயேச்சை எம்எல்ஏவான அங்காளன், எம்பி செல்வகணபதி மற்றும் பாஜக நிர்வாகிகளும் இச்சந்திப்புகளில் உடன் இருந்தனர்.
இதுபற்றி கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, “சுயேச்சை எம்எல்ஏவான அங்காளன் தற் போது மத்திய அமைச்சர்கள் மற்றும்கட்சி நிர்வாகிகளை சந்தித்து தனது கோரிக்கைகளை தெரிவித்தார்” என்று குறிப்பிட்டனர்.