Published : 07 Mar 2022 10:06 PM
Last Updated : 07 Mar 2022 10:06 PM

”தலைமைக்கு அதிமுகவினர் அனைவரும் கட்டுப்பட வேண்டும்” - ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

மதுரை: "அதிமுக, தலைமைக்கு கட்சியினர் அனைவரும் கட்டுப்பட வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் "எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட அதிமுக பல்வேறு சவால்களைத் தாண்டி செயல்படுகிறது. திமுகவின் அடக்குமுறையைத் தாண்டி அதிமுக செயல்படுகிறது. அதிமுக மட்டுமே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அதிமுகவின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் முயற்சி நடைபெறுகிறது.

இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் அதிமுகவின் பாதுகாப்பு கவசங்களாக திகழ்கிறார்கள். 50 ஆண்டுகளாக அரசியல் வரலாற்றில் அதிமுக 7 முறை தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது. திமுக அறிவித்த வாக்குறுதியை இன்னும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் முழுவதும் நடைபெற்ற நகர்புற தேர்தலில் முறைகேடுகள் செய்து திமுக வெற்றியை பெற்றுள்ளது.

திமுக தலைமையிலான அரசு நாடகங்களை மட்டுமே நடத்துகிறது. மக்கள் அதிமுகவுக்கு மட்டுமே வாக்களித்து உள்ளார்கள். தொழில்நுட்ப கோளாறு செய்து திமுக வெற்றி பெற்றதோ என தோன்றுகிறது. தேர்தல் ஆணையத்தால் இபிஎஸ் - ஓபிஎஸ் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். இபிஎஸ் - ஓபிஎஸ் இணைத்து பல்வேறு தேர்தல்களை சந்தித்து உள்ளனர்.

அண்ணா கற்று கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அதிமுக தலைமைக்கு அனைவரும் கட்டுப்பாட வேண்டும், அதிமுகவின் கொள்கைக்கும், கோட்பாட்டுக்கும் எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x