பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய சபரீசன் மனு தள்ளுபடி

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய சபரீசன் மனு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி சபரீசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். ஸ்டாலினின் இந்தப் பேச்சு தனியார் தொலைக்காட்சியிலும், தமிழ் வார இதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தன.

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ந்து தன்னை தொடர்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை ஸ்டாலின் பேசிவருவதால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் வி.சபரீசன், தனியார் தொலைக்காட்சி மற்றும் வார இதழ்களின் ஆசிரியர்கள் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, இவர்களுக்கு எதிராக கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்துள்ள வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி சபரீசன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சபரீசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தனியார் பத்திரிகையில் செய்தி வெளியானதற்கு சபரீசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பத்திரிகைக்கும், சபரீசனுக்கும் தொடர்பே இல்லாத நிலையில் சபரீசனை வழக்கில் இணைத்தது தவறு’ என்று வாதிடப்பட்டது.

சபரீசன் தரப்பு கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதி, அவதூறு வழக்கை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும், பொள்ளாச்சி ஜெயராமனின் மனு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in