

சென்னை: மார்ச் மாதத்தில் சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். விடுமுறைக் கால பதிவுக் கட்டணமாக ரூ.200 கூடுதலாக செலுத்தி பத்திரப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிதி ஆண்டின் இறுதி மாதம் என்பதால் மார்ச் மாதத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு அதிகமாக இருக்கும். கடன் பெற்று வீடு, மனை வாங்குவோர் மார்ச் மாதத்துக்குள் பத்திரப் பதிவை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பார்கள். தொழில் முனைவோரும் இதே நிலையில் இருப்பார்கள். சில சார் பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் பத்திரப் பதிவுக்கான டோக்கன் அதிகமாக பதிவு செய்யப் பட்டுள்ளன.
இதை கருத்தில் கொண்டு, அதிகரித்துள்ள ஆவணப் பதிவுகளுக்கு ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். அந்த நாட்களில் தமிழ்நாடு பதிவுச் சட்ட விதியின்படி சிறப்பு அவசரநிலை அடிப்படையில் விடுமுறைக் கால ஆவணப் பதிவுக்கான கட்டணமான ரூ.200 மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, பத்திரப் பதிவை உரிய நேரத்தில் முடித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.