இலவச அரிசி பெறாதவர்களின் சிவப்பு ரேஷன் அட்டைகள் ரத்து: புதுச்சேரி அரசு அறிவிப்பு

இலவச அரிசி பெறாதவர்களின் சிவப்பு ரேஷன் அட்டைகள் ரத்து: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Updated on
1 min read

புதுச்சேரி: இலவச அரிசி பெறாத சிவப்பு ரேஷன் அட்டைகளை ரத்து செய்யப்போவதாக புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் அட்டைகளை வசதியானவர்கள் வைத்துள்ளதாக புகார்கள் அதிகளவில் உள்ளன. பல ஏழைகள் சிவப்பு அட்டை கிடைக்காமல் மஞ்சள் நிற அட்டைகள் வைத்துள்ளனர். இதை கணக்கெடுப்பு நடத்த பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டும் அதை செயல்படுத்தவில்லை.

இந்நிலையில், ஏழைகளுக்காக இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு முழுமையாக பூர்த்தியாகவில்லை. சிவப்பு அட்டை பல்வேறு சலுகையை பெறும் வசதியானோர் இலவச அரிசியை மட்டும் வாங்கவில்லை.

இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் சக்திவேல் இன்று வெளியிட்ட உத்தரவு:

”புதுச்சேரியில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு அனைத்து சிவப்பு அட்டைத்தாரர்களுக்கும் குடும்ப அட்டையிலுள்ள நபர் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ வீதம் இலவசமாக அனைத்து பகுதிகளிலும் தரப்படவுள்ளது. இந்த இலவச அரிசியை வரும் 20ம் தேதிக்குள் பெறவேண்டும். இலவச அரிசி பெறாதவர்களின் சிவப்பு குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும்."

என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in