Published : 01 Mar 2022 08:21 AM
Last Updated : 01 Mar 2022 08:21 AM

சிதம்பரம் நடராஜர் கோயில் - சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட சென்ற 63 பேர் கைது

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட சென்ற தெய்வத் தமிழ் பேரவையினரை கைது செய்து வேனில் ஏற்றும் போலீஸார்.

கடலூர்

தெய்வத்தமிழ் பேரவை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட சென்ற 63 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயஷீலா என்ற பெண் பக்தர் தரிசனம் செய்ய முயன்றார். ஆகம விதியை காரணம் காட்டி தீட்சிதர்கள் அவரை தடுத்தனர். அப்போது அவர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதைக் கண்டிக்கும் வகையில், தஞ்சாவூரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் தெய்வத்தமிழ் பேரவை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடையில்(கனகசபை) ஆறு நாள் தொடர்ந்து தேவாரம் திருவாசகம் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி முதல் நாளான நேற்று தெய்வத்தமிழ் பேரவையினர் தேனி மாவட்டம் குச்சனூர் வடகுரு மடாதிபதி , ராஜயோக சித்தர்பீடம் குச்சனூர் கிழார் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கீழவீதி தேரடியில் இருந்து ஊர்வலமாக தேவாரம், திருவாசகம் பாடி கொண்டு சிவ வாத்தியங்கள் முழங்கியபடி கீழ சன்னதி வழியாக கோயில் சிற்றம்பல மேடைக்கு செல்ல முயன்றனர்.

அவர்களை ஏடிஎஸ்பி அசோக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் ஆகியோர் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போலீஸார் 17 பெண்கள் உட்பட சிவனடியார்கள், பக்தர்கள் என 63 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து தெய்வத் தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆண்டாண்டு காலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில்(கனகசபை) பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி வந்தனர். பக்தர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தும் வந்தனர். இதற்கு தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். இதுகண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்திசட்டப்பேரவையில் தனி சட்டம்இயற்றி கோயிலை அரசுடைமை யாக்க வேண்டும். யார் தடுத்தாலும் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாடுவதில் உறுதியாக உள்ளோம்” என்றார்.

தெய்வத்தமிழ் பேரவை அறிவிப்பை ஒட்டி சிதம்பரம் கீழ வீதி பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தெய்வத்தமிழ் பேரவையினர் வரும் 5-ம் தேதி வரை நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடப்போவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x